கானா பிரபா · @kanapraba
1st Jun 2017 from TwitLonger
இளையராஜாவுக்குப் பாட்டுக் கொடுத்த பாண்டியராஜன் மாமனார் 🎼
அவிநாசி மணி தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசியர் என்ற பன்முகம் கொண்டவர். அதாவது பாண்டியராஜன் எண்பதுகளின் கவனிக்கத்தக்க நட்சத்திரமாக ஆவதற்கு முன்னாலேயே அறியப்பட்ட ஆளுமை இவர். பாண்டியராஜன் திரையுலகின் வெற்றிகரமான நடிகராக, இயக்குநராக விளங்கவும் அவருக்குத் தன் மகளைக் கட்டி வைத்தார் அவிநாசிமணி. அதீத வெற்றி, ஆர்வக் கோளாறு காரணமாகத் தானே இசையமைத்து இயக்கித் தயாரித்து நடித்த "நெத்தியடி" படம் தோல்வி கொடுத்த சூடு அவி நாசி மணியைக் கோபப்பட வைத்து மருமகரை ஒரு வழி பண்ணியதாக அப்போது கிசுகிசுவெல்லாம் வந்ததுண்டு.
காக்கிச் சட்டை சத்யா மூவீஸ் தயாரித்த போது அதன் கதை இலாகாவில் இருந்ததோடு அந்தப் படத்தில் பாடலொன்றையும் எழுதினார் அவிநாசி மணி. அந்தப் பாடல் தான் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி குழுவினர் பாடிய "பூப்போட்ட தாவணி" https://youtu.be/0lI48Y1ig60 பாட்டு. சகலாவல்லவனுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு வசூல் மழையை அள்ளிக் கொடுத்த காக்கிச் சட்டை படத்தின் வெற்றியோடு இந்தப் பாடலும் பங்கு போட்டுக் கொண்டது.
ஆனால் இது மாதிரி எத்தனை பாடலாசிரியர்களை இசைஞானி இளையராஜா உள்வாங்கிக் கொண்டாலும் பரவலாக வாலி, வைரமுத்துவோடு சமூகம் நின்று விடுகிறதே என்ற ஆதங்கத்தில் நாளை இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளின் சிறப்புத் தின் பண்டமாகப் பல நாள் உழைப்பில் உருவாக்கிய பதிவொன்று வரவிருக்கிறது. அதன் முன்னோட்டமே இது.